Published : 29 May 2021 03:12 AM
Last Updated : 29 May 2021 03:12 AM

கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் : அரசு மருத்துவமனைகளுக்கு உதவி :

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்ட கிராமப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேம்படுத்த, கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் என திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, சென்னை அணுமின் நிலையம் பெருநகர சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் கல்பாக்கம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க உள்ளதாக எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருப்போரூர் எம்எல்ஏ.பாலாஜி கூறியதாவது: சென்னை அணுமின் நிலைய நிர்வாக அதிகாரிகளை நேற்று நேரில் சந்தித்து பேசினேன்.

இதில், மாவட்ட ஆட்சியரிடம் மூலம் பெறப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம், மாமல்லபுரம் மற்றும் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 30, செய்யூர் தொகுதிக்குட்பட்ட நெறும்பூர் மற்றும் கடப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 15 என ஆக்சிஜன் செறிவூட்டிகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x