Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் - சுகாதார வழிகாட்டுதல்படி இயங்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தொடர் இயக்க தொழிற்சாலைகள், மத்திய, மாநில அரசுகளின் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தொடர் இயக்க தொழிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் (50 சதவீதம் வரை) கடந்த 24-ம் தேதி முதல் இயங்கி வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், ஒரு சில தொழிற்சாலைகள் பணியிடத்தில் கூட்டத்தை குறைக்கும் வகையில், 2 அல்லது 3 ஷிப்ட்டுகளில் இயங்குகின்றன.

அவ்வாறு இயங்கும் இந்த தொழிற்சாலைகள் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மத்திய, மாநில சுகாதார வழிகாட்டுதல்களின்படி இயங்கவேண்டும்.

இதுகுறித்து தொழிற்சாலைகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x