Published : 24 May 2021 03:12 AM
Last Updated : 24 May 2021 03:12 AM

நெல்லை, தூத்துக்குடியில் 65 சதவீத பேருந்துகள் இயக்கம் : குறைந்த எண்ணிக்கையில் பயணித்த மக்கள்

திருநெல்வேலி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப தொலை தூர நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/தென்காசி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று 65 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரும்பாலான வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வசதியாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியான தில் இருந்து கடைகள் 2 நாட்கள் திறக்கவும், பேருந்துகள் இயக்கவும் அனுமதிக்கப்பட்டது. முதல் நாளில் பெரும்பாலான பேருந்துகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில், நேற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. திருநெல் வேலி, தென்காசி மாவட்டத்தில் 65 சதவீத பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. இந்த வழித்தடத்தில் வழக்கமாக பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலையில் நேற்று பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இதேபோல் தென்காசி- சங்கரன்கோவில், தென்காசி- அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களிலும், நகரப் பேருந்துகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

திருநெல்வேலியில் இருந்து மதுரை, தென்காசி, பாபநாசம், சங்கரன் கோவில், நாகர்கோவில், தூத்துக்குடி, திசையன்விளை பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப் பட்டன. மாநகர பகுதிகளில் சொகுசு பேருந்து களும், நகர பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கின. விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை, வேலூர், திருப்பூர், கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு 40 பேருந்துகள் இயக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன், கார்கள் உட்பட வாகனங்கள் அனைத்தும் இயங்கின. தூத்துக்குடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள 290 பேருந்துகளில், 60 நகரப் பேருந்துகள் உட்பட மொத்தம் 275 பேருந்துகள் இயங்கின. தூத்துக்குடியி்ல் இருந்து சென்னை, ஓசூர், கோவைக்கு 20 அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுபோல் திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 சதவீத அரசு பேருந்துகள் இயங்கின. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட தொலைதூர நகரங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்தனர். உறவினர் வீடுகளுக்கு வந்த நிலையில் ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த பலர் பேருந்துகள் இயங்கியதையடுத்து நேற்று தங்களது வசிப்பிடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதுபோல் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான தக்கலை, திங்கள் நகர், மார்த்தாண்டம், களியக்காவிளை, கருங்கல், குளச்சல் உள்ளிட்ட ஊர்களுக்கு 15-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x