Published : 22 May 2021 03:13 AM
Last Updated : 22 May 2021 03:13 AM

காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு :

கரூர்/ புதுக்கோட்டை/ அரியலூர்/ தஞ்சாவூர்/ காரைக்கால்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது நினைவு தினம் கரூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர், காரைக்கால் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனை முதல்வர் பி.அசோகனிடம் கரூர் எம்.பி செ.ஜோதிமணி நேற்று வழங்கினார்.

இந்நிகழ்வில், மருத்துவமனை கண்காணிப்பாளர் தெய்வநாதன், காங்கிரஸ் நகரத் தலைவர் பெரியசாமி, மாவட்டப் பொருளாளர் மெய்ஞானமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், ஊழியர்களுக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பழம், பிஸ்கட், குடிநீர் பாட்டில் அடங்கிய 400 பைகளை, மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதியிடம் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் ராமசுப்புராம் வழங்கினார்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில், செயலாளர் சிவக்குமார், நகரத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். திருமானூரை அடுத்த அரண்மனைக்குறிச்சியில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் மாவட்ட மகளிரணி தலைவி மாரியம்மாள், கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர்வேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ராஜீவ் காந்தியின் படத்துக்கு காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன், பொதுச் செயலாளர்கள் அய்யப்பன், சி.ஜி.ராஜேந்திரன், செயலாளர் குமரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டன.கும்பகோணம் பாலக்கரையில் நகர காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.கே.மிர்சாவுதீன் தலைமையில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

காரைக்கால் மதகடி பகுதியில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் எம்.ஓ.எச்.யு.பஷீர், மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் உள்ளிட்டோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம், கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதேபோல, காரைக்கால் புதிய பேருந்து நிலையம், கீழக்காசாகுடி மேடு, கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x