Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை - கடைபிடிக்காத நபர்களிடமிருந்து ரூ.16 லட்சம் அபராதம் வசூல் : திருப்பத்தூர் எஸ்பி., டாக்டர்.விஜயகுமார் தகவல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறை களை கடைப்பிடிக்காத நபர்களிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு, 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

750 காவலர்கள் கண்காணிப்பு

இந்நிலையில், மே 10-ம் தேதி முதல் எஸ்பி., டாக்டர்.விஜயகுமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 750 காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த ஒருவாரத் தில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் கூறும்போது, ‘கடந்த மே 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை (நேற்று முன்தினம்) மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

200 வாகனங்கள் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து, தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x