Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் - கிருமி நாசினி தெளிக்க சோதனை ஓட்டம் : ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர்

சென்னை, நெல்லையை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘ட்ரோன்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சோதனை ஓட்டத்தை ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தி, சுகாதாரப் பணிகளை மேம்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், நெரிசல் மிகுந்த சாலைகள், ஆட்கள் செல்ல முடியாத பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவினர் வான் வழியாக பறந்து கிருமி நாசினி தெளிக்க பிரத்யேகமான ‘ட்ரோன்களை’ தயாரித்தனர்.

இதைத்தொடர்ந்து, முதற்கட்ட மாக சென்னை மாநகராட்சியிலும், அதை தொடர்ந்து நெல்லையிலும் ‘ட்ரோன்கள்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

தற்போது, திருப்பத்தூர் மாவட்டத்திலும் ‘ட்ரோன்கள்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சோதனை ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துவிட்டது.

கரோனா தொற்றால் பாதிக் கப்பட்ட 2,255 பேர் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற 18 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 2,600 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,4,27,28 மற்றும் 29-வது வார்டு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, புதுப்பேட்டைச்சாலை, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தொற்று அதிகமாக காணப் படுகிறது.

பரவல் அதிகமாக காணப்படும் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். நகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகள் குறுகிய தாகவும்,நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால் ‘ட்ரோன்கள்’ மூலம் கிருமி நாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டது.

தனியார் நிறுவன பங்களிப்புடன் திருப்பத்தூர் நகராட்சி முழுவதும் ‘ட்ரோன்கள்’ மூலம் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் மூலம் இயங்கும் ‘ட்ரோன்கள்’ கொண்டு வரப்பட்டு, அதில் 12 லிட்டர் கிருமி நாசினி அடங்கிய சிறிய டேங்க் இணைக்கப்பட்டு மேலே பறந்து சென்று கிருமி நாசினி தெளிக்க இன்று (நேற்று) சோதனை ஓட்டம் நடத்தப் பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நாளை (இன்று) முதல் 3 ‘ட்ரோன்கள்’ மூலம் நகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சாலை வழியாக வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க ஏறத்தாழ 1 மணி நேரமாகிறது. அதுவே ‘ட்ரோன்கள்’ மூலம் 3 முதல் 5 நிமிடங்கள் ஆவதால் குறைந்த நேரத்தில் அதிக இடங்களில் கிருமி நாசினி தெளிக்க முடியும் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x