Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

பணியின்போது உயிரிழந்த தொழிலாளி்யின் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. சார்பில் உதவித்தொகை :

பின்னலாடை நிறுவனத்தில் பணியின்போது உயிரிழந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு, இ.எஸ்.ஐ. சார்பில் நேற்று உதவித்தொகை வழங்கப்பட்டது.

திருப்பூர் - காங்கயம் சாலை புதுப்பாளையம் அருகே உள்ள பின்னலாடை நிறுவனத்தில், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வில்பிரட் ஜோஸ் (25) என்பவர் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அக்.4-ம் தேதி பணி நிமித்தமாக பெங்களூரு சென்றார். அங்குள்ள தொழிலாளர் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு திரும்பினார். சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார். வில்பிரட் ஜோஸ் பணிபுரிந்து வந்த நிறுவனம், அவரை இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவு செய்திருந்தது. பணியின்போது ஏற்பட்ட உயிரிழப்பு என்பதை, இ.எஸ்.ஐ. கழகமும் அங்கீகரித்தது.

இதையடுத்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு கோவை இ.எஸ்.ஐ. சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு), சான்றோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில், இ.எஸ்.ஐ. கிளை (திருப்பூர்) மேலாளர் திலீப், பின்னலாடை நிறுவனத்தின் மனித வள மேலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில், வில்பிரட் ஜோஸின் பெற்றோர் ஜாஸ்சன் பெர்னாண்டஸ், ஷெரினாஸ் ஆகியோரிடம் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை நேற்று வழங்கினார்.

நாளொன்றுக்கு ரூ.151.50 வீதம், மாதந்தோறும் அவர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நிலுவைத்தொகை ரூ.86 ஆயிரம் பெற்றோர் இருவருக்கும் சரிபாதியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட விளக்கம்

பணியின்போது உயிரிழந்த தொழிலாளியின் பெற்றோருக்கு, திருப்பூரில் நேற்று உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்கிய இ.எஸ்.ஐ அலுவலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x