Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

தொடர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம் - அரக்கோணத்திலிருந்து நீலகிரிக்கு வந்த பேரிடர் மீட்புக்குழு :

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கன மழை காரணமாக அரக்கோணத்திலிருந்து 25 பேர் அடங்கிய பேரிடர் மீட்புக்குழு மாவட்டத்துக்கு வந்தனர்.

அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் முதல் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. குன்னூரில் 6 இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை - கூடலூர் சாலையில், பைக்காரா பகுதியில் விழுந்த ராட்சத மரத்தை, தீயணைப்புத் துறையினர் அகற்றினர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அங்கு 160 பாதுகாப்பு முகாம்கள் திறக்கப்பட்டு, மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன, 42 மண்டல குழுக்கள் உட்பட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து களத்தில் உள்ளனர். மாவட்டத்தில் பிற இடங்களிலும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மழையால் போதிய பாதுகாப்பு இல்லை என கருதினால் பாதுகாப்பு முகாம்களில் தங்கலாம். இதற்காக அந்தந்தப் பகுதி வருவாய்த் துறையினரை பொதுமக்கள் அணுக வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், மீட்புக்கருவிகளுடன் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.

நேற்று காலை வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் தேவாலாவில் அதிகபட்சமாக 137 மி.மீ. மழை பதிவானது. கிண்ணக்கொரையில் 100, சேரங்கோட்டில் 72, பந்தலூரில் 56, கெத்தையில் 52, பாலகொலாவில் 45, குந்தாவில் 39, கூடலூரில் 35, உதகையில் 34, அவலாஞ்சியில் 32, குன்னூரில் 31, எமரால்டில் 28, கேத்தியில் 26, அப்பர் பவானியில் 25, நடுவட்டத்தில் 20, பர்லியாறில் 19, கல்லட்டியில் 16 என மாவட்டம் முழுவதும் சராசரியாக 33.6 மி.மீ. மழை பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x