Published : 16 May 2021 03:16 AM
Last Updated : 16 May 2021 03:16 AM

ஒடிசாவில் இருந்து 27.6 டன் எடையுள்ள - 2 ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் திருவள்ளூர் வருகை :

ஒடிசாவில் இருந்து விரைவு ரயில் மூலம் 27.6 டன் எடைகொண்ட 2 ஆக்சிஜன் டேங்கர் லாரிகள், நேற்று திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தடைந்தன.

தமிழகத்தில் கரோனா தொற்று 2—வது தீவிரமாக பரவி வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தமிழக அரசு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் வரவழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதற்காக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு விரைவு ரயில் மூலம், 5 டேங்கர் லாரிகள் திரவ ஆக்சிஜன் எடுத்து வர அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 2 டேங்கர் லாரிகள், திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தன. ஒவ்வொறு டேங்கர் லாரியிலும் தலா 13.8 டன் எடை கொண்ட ஆக்சிஜன் நிரப்பப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், மற்றொன்று, சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மதுரைக்கும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, மேலும் ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக நேற்றுமாலை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து விரைவு ரயிலில் 5 காலி டேங்கர் லாரிகள் ரூர்கேலாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x