Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவரை நியமிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம், ஆம்பூர் எம்எல்ஏ வில்வ நாதன் கோரிக்கை மனு அளித்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யத்தை, ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் ‘‘ஆம்பூரில் கரோனா சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 80 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள வெண்டிலேட்டர் கருவி மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவரை நியமிக்க வேண்டும்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் நகரம் அமைந்திருப்பதால் விபத்து காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். ஆனால், அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற நேரத்தில் ஆம்பூர் பகுதி நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்பூர் பகுதிக்கு என தனியாக 50 படுக்கைகளை ஒதுக்க வேண்டும். மேலும், விபத்து தொடர்பான அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, எலும்பு சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் போதுமானதாக இல்லை.
எனவே, நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் கட்டித் தர வேண்டும்’’. இவ்வாறு அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சுப்பிர மணியம் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்து, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT