Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஒரேநாளில் தற்கொலை :

கரோனாவால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூரை அடுத்த மேலையூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (48) என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 11-ம் தேதிமுதல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்த சண்முகம் தனது லுங்கியால் இரும்பு கேட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட, மற்ற நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சண்முகம் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக உடன் சிகிச்சை பெறுபவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல, சின்னகாஞ்சிபுரம், வரதப்ப நகரைச் சேர்ந்த கட்டிடப்பணியாளரான கோபாலகிருஷ்ணன் (54) கரோனா தொற்று காரணமாக கடந்த 10-ம் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மாலையில் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இவர் நேற்று மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில் நேற்று 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் மற்றவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சிகிச்சை பெறுபவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x