

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் வகுப்புகள் நடந்தது.
இந்நிலை தற்போது வரை தொடர்கிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் செயல்பட்டது.இதனால், பெரும் பாலான தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டது. பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கையால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக சம்பளம் இன்றி வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளோம். பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களின் கட்டணத்தை கொண்டே, ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட நிர்வாக செலவினங்களை மேற்கொண்டு வருகிறது.
கரோனா தொற்றால் கட்டண குறைப்பு, பள்ளி இயங்காமல் மூடியிருப் பதால் எங்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அரசு எங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.