Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் - கூடுதல் கரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த தீவிரம் : அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடிக்க ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து, சிறப்பு சிகிச்சை மையங்களை அதிகரிக்க 4 வட்டங்களில் இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு, அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடிக்குமாறு வட்டாட்சியர்களுக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றின் பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவ மனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப் பட்டுள்ள கரோனா வார்டு முழுமையாக நிரம்பி விட்டதால் புதிதாக கரோனா தொற்றுடன் வருவோர்களுக்கு சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், 4 வட்டங்களிலும் கூடுதல் சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளும், அங்கு நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை மையங்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, புதிதாக தொடங்க உள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடித்து விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்தந்த வட்டாட்சியர்களுக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஆம்பூர் வட்டத்தில் மாதனூர், சோலூர், உமராபாத் ஆகிய பகுதிகளிலும், வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரியிலும், நாட்றாம்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருப்பத்தூரில் 2 தனியார் பள்ளிகள், நாட்றாம்பள்ளியில் அரசுப்பள்ளியில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போது கூடுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பத்தூர் அடுத்த திம்மண புதூர் ஊராட்சியில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 50 படுக்கை வசதியுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

அதேபோல, வாணியம்பாடி அடுத்த ஆலாங்காயம் பேரூராட்சி யில் உள்ள ஜேவிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 300 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஜெனதாபுரம் எஸ்எப்எஸ் மெட்ரிக் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் வர்த்தக மையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப் பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட் டத்தில் 16 இடங்களில் 2,300 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர மேலும் சில இடங்களில் சிகிச்சை மையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வரு கின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x