Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM

சோளிங்கர், அரக்கோணம் பகுதிகளில் - மது விற்பனையில் ஈடுபட்ட 19 பேர் கைது :

சோளிங்கர், அரக்கோணம் பகுதிகளில் சாராயம் கடத்தல், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 19 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதி களில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து, சோளிங்கர் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர் சோளிங்கர் - சித்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சோளிங்கர் அடுத்த மோட்டூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி (65) என்பவரை மடக்கி விசாரணை நடத்தியபோது அவர் ஆந்திராவில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து சோளிங்கரில் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டு ஊரடங்கு காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய சிலர் முயன்று வருவதாக அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அரக்கோணம் நகரம், கிராமிய, நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம், அவலூர், தக்கோலம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை வீடுகள், கடைகளில் பதுக்கி வைத்திருந்த 18 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 780 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x