

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட 235 கிலோ கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 தமிழக மீனவர்களை கைது செய்தனர்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நடுக்கடலில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த நாட்டுப் படகில் சோதனையிட்டனர். அப்படகில் 235 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சா மற்றும் படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். படகிலிருந்த 7 பேரை கைது செய்தனர். விசாரணையில், அந்த 7 பேரும் தூத்துக்குடி மாவட்டம் ரோஷ்மா நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் வந்த நாட்டுப் படகு ஜோய்லின் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.