Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது :

தமிழகத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நேற்று நெருங்கியது. மேலும் நேற்று ஒரே நாளில் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கரோனாதடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் புதியதாக கரோனா பதிப்பு நேற்று புதிய உச்சமாக 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று புதிதாக 24,898 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 14,683 பேர், பெண்கள் 10,215 பேர் ஆவர்கள். அதிகபட்சமாக சென்னையில் 6,678 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டுமே 3 லட்சத்து 70 ஆயிரத்து 596 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் சென்னையில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 259 பேர் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 11 லட்சத்து 51 ஆயிரத்து 058 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 6,047 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 21,546 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 33,316 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 468 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதுபோல், கரோனாவால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 195 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 25 வயது முதல் 88 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 5,021 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 31 லட்சத்து 24 ஆயிரத்து 635 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 44 ஆயிரத்து 948 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x