Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் மடத்துக்குளம் தொகுதி : வளர்ச்சி பணிகள் நடைபெறுமா?

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சி.மகேந்திரன் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில அளவில் பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியில் அமருகிறது. இந்நிலையில், மடத்துக்குளம் தொகுதி எதிர்க்கட்சி உறுப்பினரை பெற்றதாக மாறியுள்ளது. 2016–ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த இரா.ஜெயராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்ததால், மடத்துக்குளம் தொகுதி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-வை பெற்றது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "மடத்துக்குளம் தொகுதி 2,47,000 வாக்காளர்களை கொண்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது குறிப்பிட்டு சொல்லும்படியான திட்டங்கள்எதுவும் செயல்படுத்தப்படவில்லை. திமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதாலேயே, அரசின் நலத்திட்டங்கள் பெரும்பாலான பயனாளிகளுக்கு கிடைக்காமல் போனது. அடிப்படை குடிநீர் திட்டங்கள் கூட கடைக்கோடி கிராம மக்களுக்கு கிடைக்கவில்லை. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமராவதி சர்க்கரை ஆலை புனரமைப்புக்கென நிதி ஒதுக்கப்படவில்லை. அரசு நெல் கொள்முதல் மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை உட்பட புதிதாக எந்த திட்டப் பணிகளும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், 2021 தேர்தல் மூலம் அதிமுகவை சேர்ந்தவர் வெற்றிபெற்றதால் மீண்டும் இத்தொகுதி 2-வது முறையாக எதிர்க்கட்சியின் தொகுதியாக மாறியுள்ளது. ஆளும் திமுக ஆட்சியிலும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x