Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

சேலம் அரசு மருத்துவமனையில் - கரோனா சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு :

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயாளிகளுக்கு உடனுக்குடன் மருத்துவமனை யில் படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, சேலம் மாவட்டத்திலும் கரோனா தொற்றினால் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கரோனா வார்டுகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேருவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு, உடனுக்குடன் படுக்கை வசதி கிடைப்பதில்லை.

இதனால், ஆம்புலன்ஸில் வரும் கரோனா நோயாளிகள், ஆம்புலன்ஸில் காத்திருக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ மனை அதிகாரிகள் கூறும்போது, “சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள 800 படுக்கைகளும் நிரம்பியதன் காரணமாக, புதிதாக வருபவர்களுக்கு உடனுக்குடன் படுக்கை வசதி அளிக்க முடிவதில்லை. சிகிச்சையில் குணமடைந்து நோயாளிகள் வெளியேறிய பின்னரே, புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x