Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - கரோனா பராமரிப்புக்காக ஜிப்மர் மாற்றி அமைப்பு :

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை வளாகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கரோனா பராமரிப்புக்காக படிப்படியாக மாற்றி அமைக்கப்படுவதாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த நான்கு முதல் ஐந்து வாரங்களில் புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. அதனால், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிலும் முக்கியமாக ஆக்சிஜன் மற்றும் உயர் தீவிர சிகிச்சை தேவைபடுவோர் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. திடீரென தீவிர தொற்றால் நிலை தடுமாறி மிகவும் கவலைகிடமான நிலையில் மூச்சு திணறலுடன் வரும் கரோனா நோயாளிகளின் மீது ஜிப்மர் நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னால் கரோனா நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட 229படுக்கைகள் தற்போது 400 படுக்கைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கை 35-ல் இருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்காக மேலும் 75 படுக்கைவசதிகள் போர்க்கால அடிப்படையில் உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதி தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வரும் இந்நேரத்தில், இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ பணியாளர்களின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் ஜிப்மரில் பல்வேறு பிரிவுகளில் செயல்படும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கரோனா சிறப்பு சிகிச்சைகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

கரோனா சிகிச்சைக்காக நிர்ணயிக்கப்பட்ட வளாகம் அல்லது மற்ற உயர் சிறப்பு சிகிச்சை வளாகம், மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு வளாகம், அவசர சிகிச்சை மற்றும் முதன்மை மருத்துவமனை வளாகம் ஆகிய கட்டிடங்களில் உள்ள படுக்கைகள் கரோனா பராமரிப்புக்காக படிப்படியாக மாற்றி அமைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், அவசர மற்றும் கரோனா அல்லாத சேவைகள், இயன்ற வரை சிறப்பாக செயல்பட ஜிப்மர் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்வதால், ஜிப்மரில் கூடுதல்படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்ட உடனேயே நிரம்பிவிடுகின்றன.

ஜிப்பர் நிறுவனம், தனது சிறப்பான சேவையை செய்துகொண்டிருக்கும் அதேவேளையில், இப்பகுதியில் உள்ளஏனைய அனைத்து மருத்துவமனைகளும் மற்றும் சுகாதார நிறுவனங்களும் தங்களின் படுக்கைஎண்ணிக்கையை பொருட்படுத்தாமல், கோவிட் தொற்று நோய் படுவேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்ள அவசரமாக சிறப்பு படுக்கை வசதிகளைஉருவாக்கி கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x