Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

புதுச்சேரியில் புதிதாக 1,138 பேருக்கு கரோனா : ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 1,138 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 6,820பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 760,காரைக்கால் - 142, ஏனாம் – 172, மாஹே - 64 பேர் என மொத்தம் 1,138 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 16 பேர், காரைக்காலில் ஒருவர் என 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களைச் சேர்த்து, இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 865 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.37 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 63 ஆயிரத்து 298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,928 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8,921 பேரும் என மொத்தமாக 10,849 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 886 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 584 (81.49 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 210 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 952 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 245 பேருக்கு (2 வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x