Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ :

புதுக்கோட்டை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட முதல் சட்டப்பேரவை உறுப்பினராக எம்.சின்னதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்கள், தொழிற் சங்கத்தினர் என வலிமையோடு இருந்தாலும் இம்மாவட்டத்தில் அக்கட்சியில் இருந்து இதுவரை யாரும் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றதில்லை. இந்நிலையில், இம்முறை கந்தர்வக்கோட்டை தனி தொகுதியில் இக்கட்சியின் சார்பில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ஜெயபாரதி உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.

அதிமுக உட்பட மற்ற வேட்பாளர்களுக்கு பெரியளவில் விஐபிகளின் பிரச்சாரம் இல்லாவிட்டாலும் சின்னதுரையை ஆதரித்து விஐபிகள் பிரச்சாரம் செய்யாத நாளே இல்லை எனும் அளவுக்கு பிரச்சார களம் இருந்தது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர், தொகுதியில் தங்கி இருந்து தீவிர களப்பணியாற்றினர். இதன் விளைவாக, அதிமுக வேட்பாளரைவிட 12,721 வாக்குகள் அதிகம் வெற்று சின்னதுரை வெற்றி பெற்றார். இதன் மூலம் மாவட்டத்தின் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எனும் கணக்கை சின்னதுரை தொடங்கி இருக்கிறார்.

இவரது மனைவி 100 நாள் வேலைத்திட்ட பணியாளர். சிறிய அளவிலான ஓட்டுவீட்டைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த, எளிய குடும்பத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள சின்னதுரையை பல்வேறு கட்சியினர், தொழிலாளர்கள், கிராம மக்கள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x