Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - கரோனா தொற்று தடுப்புப்பணிகள் தீவிரம் : நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ‘மாஸ் கிளீனிங்’

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 7 பேர் மே 1-ம் தேதி ஒரே நாளில் உயிரிழந்தனர். கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன.

நகர் புறங்களை தொடர்ந்து தற்போது கிராமப்பகுதிகளிலும் கரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது.

குறிப்பாக, கந்திலி,ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி மற்றும் மாதனூர் ஒன்றியப்பகுதி களில் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர். ஆனால், போதுமான அளவுக்கு தடுப்பூசி இல்லாததால் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

45 வயதை கடந்த 85 சதவீதம் பேருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் முதல் டோஸ் போட்டவர்களுக்கே 2-வது டோஸ் போட தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் தினசரி தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் ஏமாற் றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளீனிக்குகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் கரோனா தடுப்புப்பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றாம்பள்ளி போன்ற இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், தங்களுக்கான சிகிச்சை முழுமையாக அளிக்கப்படவில்லை என கரோனா நோயாளிகள் குற்றஞ்சாட்டி வரு கின்றனர். அதேநேரத்தில் கரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு அதற்கான முடிவுகள் வழங்கவும் தாமதம் ஏற்படுவதால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமல் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

இது போன்ற பல்வேறு குற்றச் சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து, 208 குழுக்களை அமைத்து மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

அதேபோல, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியப்பகுதிகளில் கரோனா தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் கரோனா தடுப்புப்பணிகள் தொடங்கின.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ‘மாஸ் கிளீனிங்’ நேற்று முன்தினம் நடைபெற்றது. நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் 200 பேர் 36 வார்டு களிலும் கிருமி நாசினி தெளித்து, நோய் தடுப்பு மருந்துகளை தூவினர். நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த குப்பைக்கழிவுகளை அகற்றி, கால்வாய்களை தூர்வாரி மருந்து தெளித்தனர்.

இது குறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குமார் கூறும்போது, ‘‘மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவின்பேரில் நகராட்சி முழுவதும் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர, பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி, உழவர் சந்தை, வாரச்சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு கலந்து தூவியுள்ளோம். மேலும் கிருமி நாசினி தெளித்துள்ளோம்.

அடுத்த வாரத்தில் தொற்று அதிகம் உள்ள பகுதியில் உள்ள வீட்டுக்குள் சென்று கிருமி நாசினி தெளிக்கவும், அங்குள்ள கால்வாய்களை தூய்மைப்படுத்தி மருந்துகளை அடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகத்தில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்கள் நோய் தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x