Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற - உதவி எஸ்ஐக்கு ஓட்டுநராக மாறிய ஆய்வாளர் :

புதுச்சேரி

புதுச்சேரியில் ஓய்வுபெற்ற காவல்உதவி ஆய்வாளருக்கு, ஆய்வாளர் திடீர் ஓட்டுநராகி அவரை கவுரவித்தார்.

புதுச்சேரி காலாப்பட்டு அடுத்தபிள்ளைச்சாவடி வாத்தியார் வீதியைச் சேர்ந்தவர் முருகையன் (60). இவர் புதுச்சேரி காவல்துறையில் 1987-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். முருகையன் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றதால் அவருக்குபிரிவு உபச்சார விழா முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த விழா முடிவடைந்ததும் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரை கவுரவப்படுத்தும் வகையில் அவரை ஜீப்பில் அமர செய்தார். தானே 10 கி.மீ தூரம் ஜீப்பை ஓட்டிச் சென்று முருகையனை அவரது வீட்டில் இறக்கிவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுதொடர்பாக காவல் ஆய்வாளரிடம் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘‘காவல்துறையில் 34 ஆண்டுகள் சிறப்பான சேவை புரிந்துள்ளார். காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை முருகையன் குறித்து உயர்வாகவே தெரிவித்தனர். வீட்டில் இருந்து உணவு கொண்டு வரும்போது கூட இரண்டு பேருக்கு சேர்த்தே கொண்டு வருவார். நேர்மையான நல்ல மனிதர். அனைவரிடமும் கனிவுடனும், அரவணைப்புடனும் நடந்து கொள்வார். புதிதாக வருபவர்களுக்கு பணிகளை சொல்லிக் கொடுப்பார். பெண் காவலர்களுக்கு தந்தை போன்று இருந்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x