Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள - நுண் பார்வையாளர்களுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை :

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணும் பணி இன்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவின் ரகசியம் தொடர்பான உறுதிமொழி இன்று காலை 7.55 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் வாக்கு எண்ணிக்கை பணி அலுவலர்களால் ஏற்கப்படும்.

தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கும். காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணும் மையத்தில் 6 தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் 84 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இன்று அதிகாலை 5 மணியளவில் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் மேஜைவாரியாக வாக்கு எண்ணும் அலுவலர்களைத் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

கட்டுப்பாட்டு இயந்திரம் அடங்கிய பெட்டி மேஜைக்கு வரப்பெற்றவுடன் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சீலினை அகற்றி வெளியே எடுத்து கருவியில் ஏற்கெனவே சீல்கள் வைக்கப்பட்டுள்ளதை வேட்பாளர்கள், முகவர்களிடம் காண்பித்து உறுதி செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

கட்டுப்பாட்டு இயந்திரத்தில் வேட்பாளர்கள் வாரியாக பதிவாகியுள்ள வாக்குப் பதிவு விவரத்தினை அனைத்து முகவர்களுக்கும் தெரியுமாறு காண்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டுக் கருவியின் திரையில் தோன்றும் மொத்தம் பதிவான வாக்குகள் விவரம், ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்குகள் விவரம் தோன்றுவதை முகவர்களுக்கு காண்பிக்க வேண்டும். இந்தப் பணிகளை நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பொது பார்வையாளர்கள் பி.எ.ஷோபா, சாந்தா எல்.ஹல்மானி, கோபால் ராம் பிர்டா, சி.அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x