Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

புதுக்கோட்டையில் 6 தொகுதிகளின்வாக்கு எண்ணும் பணிக்கு 700 பேர் :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகிய வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் இன்று(மே 2) காலை 8.30 மணியில் இருந்து எண்ணப்பட உள்ளன. தொடக்கத்தில் தபால் வாக்குகளும், அதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் எண்ணப்பட உள்ளன. அதன்படி, கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் 20 சுற்றுகளிலும், விராலிமலை, திருமயம், ஆலங்குடி ஆகிய தொகுதிகளில் தலா 23 சுற்றுகளிலும், அறந்தாங்கி தொகுதியில் 25 சுற்றுகளிலும் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணியில் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து 700 பேர் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கு, கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மொத்த வேட்பாளர்கள் 112 பேர் மற்றும் இவர்களுக்கான முகவர்கள் 1,568 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதேபோன்று, பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 850 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையையும் முறைப்படி அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் ஒலி பெருக்கியில் அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x