Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கரோனா தொற்று இல்லை என்ற - உறுதிச் சான்றுடன் வருவோருக்கு மட்டுமே அனுமதி : புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கரோனா தொற்று இல்லைஎன உறுதி சான்றுடன் வருவோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதிநடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே. 2-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பதிவானவாக்குகளின் எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.

மத்திய அரசின் கரோனா விதிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவு என இவை அனைத்தும் பின்பற்றப்பட உள்ளது. கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது 2 முறை கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி வழங்கப்படும். கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து கொண்டு வர வேண்டும். வெற்றி வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வெற்றி ஊர்வலம் நடத்தக் கூடாது. அதேபோல் வெற்றிபெற்ற உடன் இனிப்பும் வழங்கக்கூடாது.

கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும்கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படும். பிபிஇ கிட் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ரேபிட் கிட் முறையில் கரோனா பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.

மூன்று வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் சுகாதாரத்துறை நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

ஏற்கெனவே ஒரு அறைக்கு 7 டேபிள்கள் போடப்பட்டது. தற்போது கரோனா விதிகளை பின்பற்றுவதால் ஒரு அறைக்கு 5 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வர சற்று காலதாமதம் ஆகலாம்.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முன்னணி நிலவரம் 10 மணிக்கு தெரியவரும். இதன் முடிவு 12.30 மணிவரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது கட்டமாக 1 மணிக்கு 8 தொகுதிகள் எண்ணப்படுகிறது. அதன் முடிவுகள் தெரிய 6 மணி வரை ஆகலாம்.

இறுதியாக மாலை 6 மணிக்கு 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதன் முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகலாம். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல்5 சுற்றுவரை செல்ல வாய்ப்புள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் வாக்குஎண்ணிக்கை மையங்கள் மட்டுமின்றி, நகரம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பார்கள். ஆகவே மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x