

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாபாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ரெம்டெசிவர் மாத்திரைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு சார்பில்சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டமும் உள்ளது.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள வர்களுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து, மாத்திரைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வசதிபடைத்தவர்கள் மட்டுமே இதை வாங்கி பயன்படுத்தும் நிலையுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் வாங்கி பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் இந்த மாத்திரைகளை விற்பனை செய்யும் மையத்தை அரசு சார்பில் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.