Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

கடலோர கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுமானங்களை முறைப்படுத்த தடை :

மதுரை

தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கடலோரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை அடிப்படையில், உரியஅனுமதி பெற வேண்டும். இவ்வாறுமுன் அனுமதி பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் அனுமதி அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதா? அந்தக் கட்டுமானங்கள் மீனவர்கள் உள்ளடங்கிய கடற்கரை வாழ் மக்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் நிறைவேற்றும் வகையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும்.முன் அனுமதி கொடுக்கும்போது, அதனால் கடல் அரிப்புக்கு வழிவகுக்காமல் இருக்க வேண்டும். அனுமதி இல்லாமல் கட்டுமானங்களை மேற்கொள்வது சட்டவிரோதம். அவ்வாறு அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை அகற்றவும், அதை அனுமதித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டுமானங்களை முறைப்படுத்துவது தொடர்பாக 19.02.2021-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த விதிகளை மீறி கடலோரக் கட்டுப்பாட்டு பகுதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முறைப்படுத்தும் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் அதிகரிக்கும். இதனால் அந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, அதைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் அறிவிப்பாணைக்கு தடை விதித்து, விசாரணையை 25.08.2021-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x