சலூன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால் - நிவாரணத் தொகை வழங்க சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை :

சலூன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால் -  நிவாரணத் தொகை வழங்க சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை  :
Updated on
1 min read

ஊரடங்கின் ஒரு பகுதியாக சலூன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால் கடை வாடகை, மின் கட்டணம் மற்றும் நிவாரணைத் தொகை வழங்க வேண்டுமென, திருப்பூர் மாவட்ட சவரத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று சவரத் தொழிலாளிகள் அளித்த மனுவில், "கரோனா பரவல் காரணமாக அழகு நிலையங்கள், சலூன்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.15,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் கடை நடக்கும்பட்சத்தில், முழு நேர கடை திறக்கும் வரை வாடகை மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அரசு வழிமுறைகளுடன் கடை திறக்க அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அளித்த மனுவில், ‘‘சலூன்களை மூட அரசு உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த தொழிலாளர்களை வேதனையடைய செய்துள்ளது. இந்த தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி சலூன்களை திறக்க தயாராக உள்ளோம். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், குடும்ப அட்டை வைத்திருக்கும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க திருப்பூர் மாநகர், மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டத்தினர் அளித்த மனுவில், "கரோனா பரவல் காரணமாக சலூன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து மீள முடியாமல் தவித்து வருகிறோம். அப்போது அரசு அறிவித்த நிவாரணத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. எனவே, தினமும் அரைநாள் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in