Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

கடலூரில் மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி - படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் :

கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் நடைபெறும். இந்த காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டை யிட்டு குஞ்சு பொரிக்கும்.

அந்த சமயங்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிபட்டு மீன்குஞ்சுகள் அழியும் நிலை ஏற்பட்டது. அதனால் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம்தேதி முதல் மே மாதம் 30-ம் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தை தமிழக அரசு 61 நாட்களாக உயர்த்தி அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகளை மீனவர்கள் ஆழ்கடலுக்கு எடுத்துச்சென்று மீன்பிடிக்கக் கூடாது. ஆனால் சிறிய படகுகளில் கடற்கரையோரத்திலும், 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும் மீன்பிடிக்கலாம்.

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் கடலூர் பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்திலும், கடலோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத் துள்ளனர். மேலும் அவர்கள் மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி, தங்களது படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.

வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள பழுதினை வெல்டிங் செய்து சரிசெய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியிலும், புதிய வலை பின்னும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x