

திருப்பூரில் பனை மரங்களை வெட்டிய சம்பவம் தொடர்பாக, மர வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று தரகர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் கருப்பசாமி, ராஜேந்திரன், செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. விளைநிலத்தை ஒட்டியே ஏராளமான பனை மரங்களும் உள்ளன. இந்நிலையில், அங்கிருந்த பனை மரங்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் அனுமதியின்றி வெட்டுவதாக நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உரிமையாளர்கள் 3 பேரும் உறவினர்களுடன் அங்கு சென்றனர். அப்போது 13 பேர் கொண்ட கும்பல் பனை மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். 5 பனை மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், இவர்களை கண்டதும் மரம் வெட்டுவதை அந்த கும்பல் நிறுத்தியது. இதையடுத்து, மரம் வெட்ட வந்தவர்கள் மற்றும் அதனை ஏற்றிச் செல்வதற்காக கொண்டுவரப்பட்ட சரக்கு வாகனத்தை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் சென்று, பனை மரங்களை வெட்டியவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அருகில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு சொந்தமான மரங்களை வெட்டுவதற்கு பதிலாக, மேற்கண்ட மரங்களை வெட்டியது விசாரணையில் தெரியவந்ததது. மேலும், செங்கல் சூளைக்காக பனை மரங்களை வெட்டிச் சென்று விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்தியூரை சேர்ந்த மர வியாபார தரகர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணன், ரங்கன் ஆகிய மூவர் மீது அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்தனர். மற்ற 10 பேரும் மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகள் என்பதால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை.