

பல்லடம் பேருந்து நிலையம் அருகே கடைகள் மற்றும்இருசக்கர வாகன பணிமனைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானதில் கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.
கோவை - திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை பல்லடம் பேருந்து நிலையம் அருகே கொசவம்பாளையம் பிரிவு பகுதியில், நேற்று முன் தினம் நள்ளிரவு முட்டை ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து,சாலையோரத்தில் இருந்த 3 கடைகள் மீதும், இரு சக்கரவாகனப் பணிமனை மீதும் மோதியது.
இதில், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், மின்மாற்றி கம்பிகள் மீது மோதியதில், அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது. ஊரடங்குநேரம் என்பதாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும் விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. சத்தம் கேட்டு அப்பகுதியினர் கேட்டு பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வருவதற்குள், லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிவிட்டார். லாரியில்இருந்த முட்டைகள் உடைந்து சேதமடைந்தன. இதுதொடர்பாக, லாரியை கைப்பற்றி பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.