Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

மாணவர் விடுதி நிதியில் முறைகேடு - தலைமை ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் :

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் உதவித்தொகையில் மோசடி செய்தது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 22 அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. விடுதியில் தங்கிப் படித்து வந்த பழங்குடியின மாணவர்களின் உணவுக்காக தலா ரூ.6,300, உதவித்தொகை ரூ.1,000 என மொத்தம் ரூ.7,300 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

அந்தப் பணத்தை, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஒவ்வொரு பழங்குடியின மாணவரின் பெயருடன், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வங்கிக் கணக்கில் செலுத்தி, தொடர்புடைய மாணவர்கள் அல்லது பெற்றோரின் கையெழுத்தைப் பெற்று அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வந்த பணத்தை, அங்கு பணியாற்றும் சமையலர் உட்பட சிலரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து, தலைமை ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டதாக பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு புகார் வந்தது. அதிகாரிகள் நடத்திய ஆய்வில் புகார்கள் உறுதியானதையடுத்து, தலைமை ஆசிரியர்கள்இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளத்திடம் கேட்டபோது, ‘‘பழங்குடியின மாணவர்களின் உணவுக்காக வழங்கப்பட்ட நிதியில் மோசடி செய்ததாக நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் பொன்னானி பழங்குடியினர் உண்டு, உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாக்கியநேசன் மற்றும் சேகர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x