Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

உதகையில் படகு ஓட்டுநர்கள் உள்ளிருப்புப் போராட்டம் : மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்த கோரிக்கை

உதகை படகு இல்லம் மூடப்பட்ட நிலையில், தங்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரக்கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் படகு ஓட்டுநர்கள் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் படகு இல்லமும் ஒன்று. இங்கு துடுப்புப் படகு, மோட்டார் படகு, மிதிபடகு என 3 வித படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மோட்டார் படகு மற்றும் துடுப்புப் படகுகள் அனுபவம் வாய்ந்த படகு ஓட்டுநர்களைக்கொண்டு இயக்கப்பட்டன. இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்றுமுதல் படகு இல்லம் மூடப்பட்டது.

இதனால், படகு ஓட்டுநர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது, தமிழகசுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகம் சார்பில் படகு ஓட்டுநர்களுக்கு ரூ.4500 நிவாரணமாக வழங்கப்பட்டது. தற்போது படகு இல்லம் மீண்டும் மூடப்பட்ட நிலையில், படகு இல்ல மேலாளர் மற்றும் மண்டல மேலாளர், தங்களை சந்திக்காமல் அலைக்கழித்து வருவதாகவும், மாற்று வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்யக் கோரியும் உதகை படகு இல்ல வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் படகு ஓட்டுநர்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த படகு ஓட்டுநர்கள், படகு இல்ல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறும்போது ‘‘உதகை படகு இல்லத்தில் 42 பேர், படகு ஓட்டுநர்களாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். 2003-ம் ஆண்டு டிரிப் அடிப்படையில் படகு ஓட்ட ஒப்புக்கொண்டு பணிபுரிகின்றனர். படகு இல்லத்தை மூட அரசு உத்தரவிட்ட நிலையில், இவர்களுக்கு எப்படி பணி வழங்க முடியும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x