Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரட்டைக் கொலை வழக்கின் ஆவணங்களின் நகல் கேட்டு சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த வழக்கின் ஆவணங்களின் நகல் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
எனக்கு எதிராக பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதை நீக்கக்கோரி தாக்கல் செய்த மனுவையும் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனவே சிபிஐ ஆவணங்கள் நகல் கேட்டு தாக்கலான மனு மற்றும் தவறான குற்றச்சாட்டு களை நீக்கக்கோரிய மனு ஆகியவற்றை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஆவணங்களின் நகல்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சதிகுமார் சுகுமார குரூப் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ கூடுதல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்தார்.
பின்னர் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT