

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள சுடலை மாட சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். திருவிழா நடைபெறும்போது, அதே ஊரைச் சேர்ந்த பலர் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம். இந்நிலையில், கடை வைப்பது தொடர்பாக வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று கோயில் பூசாரி சிதம்பரம் என்ற துரை (45) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ பெருமாள் (53) ஆகியோரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டது. இதில், சிதம்பரம் என்ற துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நடராஜபெருமாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.