கரோனா தடுப்பு மருந்துகள் போதிய அளவு வழங்க வேண்டும் : பெருந்துறை எம்எல்ஏ ஆட்சியரிடம் மனு
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு மருந்துகள் போதிய அளவு வழங்க வேண்டும், என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெருந்துறை மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் வர்த்தக நிறுவனதாரர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சினையில் நேரிடையாக தலையிட்டு உடனடியாக சாலையை செப்பனிடவேண்டும்.
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு மருந்துகள் போதிய அளவு இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கரோனா தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
