Published : 17 Apr 2021 03:15 AM
Last Updated : 17 Apr 2021 03:15 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் - சூறைக்காற்றுடன் பெய்த மழை வாழை மரங்கள் முறிந்து சேதம் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையூர், துவார், வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், செம்பட்டிவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

சூறைக்காற்றால் செம்பட்டிவிடுதி அருகே ஆண்டிக்கோன்பட்டி, துவரங்கொல்லைப்பட்டி, களபம் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. இது, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று, கொத்தமங்கலத்தில் உருமநாதன் என்பவரது வீட்டில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில், சிமென்ட் ஷீட்டுகளால் வேயப்பட்டிருந்த அந்த வீடு நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக உருமநாதன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். இந்த பாதிப்புகள் குறித்து வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

அரவக்குறிச்சியில் 22 மிமீ...

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில், அரவக்குறிச்சியில் 22 மிமீ, க.பரமத்தியில் 2.60 மிமீ என மழை பதிவாகியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x