Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

நீத்தார் நினைவு தினம், தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு - பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி :

பணியின்போது உயிர்நீத்த தீய ணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு, புதுக் கோட்டை தீயணைப்பு நிலையத் தில் உள்ள நினைவுத் தூணுக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ.பானுபிரியா, மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். இதில், உதவி மாவட்ட அலுவலர் ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கந்தர்வக்கோட்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் நிலைய அலுவலர் ரெ.ஆரோக்கியசாமி தலைமையில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல, அறந்தாங்கி, ஆலங்குடி உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்டம் துறை மங்கலத்திலுள்ள தீயணைப்பு நிலையத்தில் நேற்று நடைபெற்ற நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமை வகித்தார். நிலைய அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, நிலைய தீயணைப்புப் படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர், காரைக்காலில்...

பணியின்போது உயிர்நீத்த தீய ணைப்பு வீரர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்.14 முதல் ஏப்.20 வரை தீத்தொண்டு வார மாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தீத்தொண்டு நாள் நிகழ்ச்சியில், பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம், அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிர சன்னா, மாவட்ட உதவி அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர் திலகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, தீத் தடுப்பு சாதனங்களை முறையாக பராமரித்து, தீ விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதேபோல, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட் டத்தின் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீத்தொண்டு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நேற்று நடைபெற்ற தீத் தொண்டு வார தொடக்க நிகழ்ச்சியில், நிலைய அதிகாரி ஏ.மாரிமுத்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல்கள், தீயணைப்பு வீரர்களின் சேவைகள் உள்ளிட்ட வற்றை விளக்கி, டிஜிட்டல் பேனர்களை அமைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்வு ஒரு வாரம் நடைபெறும் எனவும், கரோனா பரவல் சூழலால் வெளிப்புற நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x