முகக்கவசம் அணியாமல் வந்த  -  மனைவிக்கு அபராதம் விதித்த சுகாதார ஆய்வாளரை தாக்கியவர் கைது  :

முகக்கவசம் அணியாமல் வந்த - மனைவிக்கு அபராதம் விதித்த சுகாதார ஆய்வாளரை தாக்கியவர் கைது :

Published on

கரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோரை தாக்கிய காகித ஆலை ஒப்பந்ததாரரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பரமத்தி வேலூரில் கபிலர்மலை சாலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருதினங்களுக்கு முன்னர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தனர். இதுதொடர்பாக பிரியா, காகித ஆலை ஒப்பந்ததாரரான அவரது கணவர் ஈஸ்வரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த ஈஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த சுகாதார ஆய்வாளர் சதீஸ்குமார் உள்ளிட்டோரிடம் தகராறு செய்து அவர்களை தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதார ஆய்வாளர் சதீஸ்குமார் அளித்த புகாரின் பேரில் ஈஸ்வரனை பரமத்தி வேலூர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராசிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவான அவரது மனைவி பிரியா, நண்பர்கள் இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in