

ஊத்துக்குளி அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி, மகள், மகன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோமீனாட்சி நகரைச் சேர்ந்த தம்பதி ராகவன், செல்வி (47). இவர்களுடைய மகன் அஸ்வின் (19), மகள் அகல்யா (17) ஆகியோர் விஜயாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வி, அஸ்வின், அகல்யா ஆகிய மூவரும் விபத்தில் சிக்கினர். விபத்தில் காயமடைந்த செல்வியால், பழையபடி நடமாட முடியாததால், 3 சக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்தார். அதேபோல, இரண்டு குழந்தைகளும் கை, கால் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை ராகவன் கவனித்து வந்தார். இந்நிலையில், ராகவன் நோய்வாய்ப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த செல்வி, குடும்பத்தை காப்பாற்ற வீட்டிலேயே தையல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
ராகவனின் மறைவால் மிகுந்தமன வருத்தத்தில் இருந்து வந்த செல்வி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வசிக்கும் தனது சகோதரி மகாலட்சுமியை நேற்று முன்தினம் இரவு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, கணவர்இறந்துவிட்டதால் எனக்கும், குழந்தைகளுக்கும் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். அதன் பிறகு, பல முறை மகாலட்சுமி தொடர்பு கொண்டபோதும், அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை.
இதுதொடர்பாக மகாலட்சுமி அளித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீஸார் நேற்று முன்தினம் இரவு செல்வியின் வீட்டுக்குச்சென்றனர். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து சென்று பார்த்தபோது, மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து, மூவரின் சடலங்களையும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மூவரின் சடலங்களும் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.