

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
வீட்டில் இருந்து வெளியே வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், கரோனாவை முழுமையாக தடுக்கவும், பொது மக்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கையை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கரோனா அறிகுறிகள தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். முகக்கவசம் அணி யாமல் வெளியே வரும் நபர்களுக்கு அலுவலர்கள் அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெரியசாமி, ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.