Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வேரோணிக்கா மேரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: என் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தோம். கரோனா பரிசோதனை, ரத்தப் பரிசோதனை செய்ய கால தாமதம் ஏற்பட்டதால் என் தாயார் உயிரிழந்தார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர மருத்துவப் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்குத் தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு உயிரிழப்புகள் தடுக்கப்படுகின்றன.
இதேபோல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர மருத்துவப் பராமரிப்புத் திட்டத்தில் நோயாளிகளுக்குத் தாமதமின்றி சிகிச்சை அளித்து உயிரிழப்புகளைத் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ பராமரிப்புத் திட்டத்தில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும், குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை சிறப்பாக அளிக்கப்படுகிறது.
தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச் சைக்கான சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி 24 மணி நேரமும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கவும், மனுதாரர் கோரிக்கை குறித்தும் தமிழக சுகாதாரத் துறை செயலர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவை முடித்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT