Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

துபாய், சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட - ரூ.79.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் :

துபாய், சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.72 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமானநிலையத்துக்கு நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் வந்தது. பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த முகமது அனாஸ் என்பவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாக்ஸில் 4 கருப்பு பொட்டலங்களும், இளஞ் சிவப்பு நிறப்பட்டையும் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது 22 தங்கத் துண்டுகள் இருந்தன. மொத்தம் 1.28 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.59.18 லட்சம்.

விசாரணையில், இந்த தங்கத் துண்டுகள் விமானத்தின் இருக்கை ஒன்றின்கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். மேலும், அந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் முன், சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்ததாகவும் தெரிவித்தார்.

மற்றொரு சம்பவம்

லக்னோவில் இருந்து சென் னைக்கு விமானத்தில் வந்த ராவுத்தர் நைனா முகமது என்பவரிடம், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது ஷூவிலிருந்து ஒரு தங்க பசை பாக்கெட் மீட்கப்பட்டது. மேலும், அவரது மலக்குடலில் இருந்து 3 தங்க பசை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றிலிருந்து 446 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

அதன் மதிப்பு ரூ.20.6 லட்சம். விசாரணையில், இந்த தங்கம் விமான இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த விமானம் இதற்கு முன்பு துபாயிலிருந்து லக்னோ வந்ததாகவும் தெரிவித்தார்.

மொத்தம் 1.72 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.79.78 லட்சம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x