Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

திருப்பூர் மாவட்டத்தில் 67.48 சதவீத வாக்குப்பதிவு : நீலகிரியில் மூன்று தொகுதிகளில் 69.60% மக்கள் வாக்களித்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று 67.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம் (தனி), உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 11 லட்சத்து 66,417 ஆண்கள், 11 லட்சத்து 93,104 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 283 பேர் என மொத்தமாக 23 லட்சத்து 59,804 வாக்காளர்கள் உள்ளனர்.

தாராபுரம் தனித் தொகுதியில் 14, காங்கயம் 26, அவிநாசி 12, திருப்பூர் வடக்கு தொகுதியில் 15, தெற்கில் 20, பல்லடம் 20, உடுமலை 15, மடத்துக்குளம் தொகுதியில் 15 பேர் என மாவட்டம் முழுவதும் 137 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவிநாசி (தனி) தொகுதியில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், உடுமலையில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்கே.ராதாகிருஷ்ணன், தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

சீரான வாக்குப்பதிவு

மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,108 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, 3,343 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு, கரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 7 மணி வரை 67.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்டம் முழுவதும் 2300 போலீஸார், மத்திய துணை ராணுவப் படையினர், ஆயுதப்படையினர் என 3600 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர்(தனி), குன்னூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 868 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. இவற்றில்,பதற்றமான 112 வாக்குச்சாவடிகளில் தலா ஒரு நுண் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 1800 பேர் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

கரோனா பரவலை தடுக்க வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்டன. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்களித்தனர். உதகை புனித சூசையப்பர் பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வாக்களித்தார். நேற்று இரவு 7 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் 69.60 சதவீதம் வாக்குகள் பதிவாயின. கடந்தாண்டைக் காட்டிலும் 0.93 சதவீத வாக்குப்பதிவு குறைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

49-பி டெண்டர் வாக்கு

இயந்திரங்களில் கோளாறு

கரோனா வாக்காளர்கள்

2 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x