Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

வாக்குச்சாவடிகளில் திமுக, அதிமுக, பாஜகவினர் வாக்குவாதம் :

கரூர்: கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடிகளில் திமுக, அதிமுக, பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் வாங்கல் வாக்குச்சாவடியை திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ நேற்று பார்வையிட சென்றபோது, அந்த வாக்குச்சாவடிக்குள் அதிமுகவைச் சேர்ந்த கரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பாலமுருகன் உள்ளே இருந்துள்ளார். மேலும், வாக்களிக்க வருபவர்களிடம் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்துள்ளார். இதுகுறித்து செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பாலமுருகன் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினார்.

பள்ளபட்டியில்... கரூர் மாவட்டம் பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக்கூறி, பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி தலைமையிலான பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பள்ளபட்டியில் உள்ள சிறுபான்மையினர் திமுகவுக்கு வாக்களிப்பதைத் தடுப்பதற்காக பாஜகவினர் பிரச்சினை செய்வதாக தெரிவித்து திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

அரவக்குறிச்சி தேர்தல் அலுவலர் தவச்செல்வன், காவல் கண்காணிப்பாளர் சுஷாங்சாய் ஆகியோர் அங்கு வந்து, இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x