Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய நிதி ஒதுக்கவில்லை என்று புகார் தெரிவித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துதரவும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நிதி ஒதுக்கப்படும்.
இந்நிலையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள பெரும்பாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான நிதியை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கவில்லை என்று கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அடிப்படை வசதிகள் செய்துதர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தொகுதி தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறியும், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, சோழிங்கநல்லூர் தனியார் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கூறும்போது, "வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளான மின் விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவற்றை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் நிதி வழங்குகிறது. ஆனால், எங்களுக்கு அந்த நிதி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் தலையிட்டு, அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தேவையான நிதியை வழங்கினார். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கிருந்து கலைந்துசென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT