Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

விருதுநகர் மாவட்டத்தில் - வேட்பாளர்கள் பேரணியாகச் சென்று பிரச்சாரம் :

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பேரணியாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.

விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளரான நடப்பு எம்.எல்.ஏ. சீனிவாசன், நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் நேற்று வாக்குச் சேகரித்தார்.

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அதிமுக நிர்வாகிகளும், பாஜகவினரும் உடன் சென்றனர்.

அமமுக வேட்பாளர் கோகுலம் தங்கராஜ் விருதுநகர் மதுரை சாலையில் தொடங்கி மாரியம்மன் கோயில், பஜார், தெப்பம் வழியாகச் சென்று எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஒன்றியப் பகுதியிலும், திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் ராஜபாளையம் நகர் பகுதியிலும் வாக்குச் சேகரித்தனர். அருப்புக்கோட்டைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனும், திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச் சந்திரனும் நகர் பகுதியில் வாக்குச் சேகரித்தனர்.

திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம்தென்னரசு திருச்சுழி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நேற்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தார். சாத்தூரில் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன், மதிமுக வேட்பாளர் ரகுராமன், அமமுக வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரும் ஒன்றியப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன், காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் ஆகியோர் சிவகாசி ஒன்றியப் பகுதியிலும், நகர் பகுதியிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வில்லிபுத்தூர் அதிமுக வேட்பாளர் மான்ராஜ், காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சார்பில் அவரது ஆதரவாளர்கள் நேற்று வில்லிபுத்தூர் நகர் பகுதியிலும், ஊரகப் பகுதியிலும் வாக்குச் சேகரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x