Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் - குமரியில் அதிகரிக்கும் கரோனா : பாதிக்கப்பட்ட பொறியாளர் உயிரிழப்பு

வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து குமரிக்கு வந்த பொறியாளர் கரோனாவுக்கு உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இருந்து வருவோர் களியக்காவிளை எல்லையில் கரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே கடந்த ஒரு மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தி்ல் கரோனாவால் 4 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த 52 வயது பொறியாளர் தனது உறவினர் திருமணத்துக்காக வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்.

பின்னர் அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல தயாரான நிலையில் கடந்த 2-ம் தேதி அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து நாகர்கோவில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குமரி மாவட்டம் வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள சுகாதாரத்தறை யினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா வேகமாக பரவுவதால் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையை உள்ளாட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x