

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கி.செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்காத வண்ணம், மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நியமனம் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1-ம் தேதி இரவு 9 மணியளவில் டூவிபுரம் முதல்தெருவில் பெருமளவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
அந்த வீட்டில், வருமான வரித்துறையினர் முழுசோதனை நடத்தியதன் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த ஜெயராம் மகன் தணிகை அரசு, துரைப்பாண்டியன் மகன் நடராஜன், டேவிட் மகன் பவுர்சிங், ராமலிங்கம் மகன் தட்சணாமூர்த்தி மற்றும் தோணி மகன் டைட்டஸ் ஆகிய 5 பேர் தங்கியிருந்தனர்.
அவர்களிடம் கணக்கில் வராத தொகை ரூ. 5,17,000 இருந்தது. முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1,56,31,301 ரொக்கம், ரூ. 5,11,21,000 மதிப்புள்ள தங்கநகைகள், ரூ. 1,45,210 மதிப்புள்ள மது பாட்டில்கள், ரூ. 1,38,650 மதிப்புள்ள கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரூ. 2,83,587 மதிப்புள்ள இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.